கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பில் நோன்புப் பெருநாள் தொழுகை சிறப்பாக நடைபெற்றது. ரமலான் 30 நாள் முழுமையடைந்ததைத் தொடர்ந்து மஸ்ஜித் முபாரக் நிர்வாகக் கமிட்டி சார்பாக கடையநல்லூரில் மூன்று இடங்களில் திடல் தொழுவதற்கு விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. இதில் காலை 6 மணி முதலே கடையநல்லூரைச் சார்ந்த இஸ்லாமியப் பெருமக்கள் ஆண்களும், பெண்களும், சிறுவர்களும் குளித்துவிட்டு , புத்தாடைகள் அணிந்து ஆயிரக்கணக்கில் தொழுகைத் திடலை நோக்கி வரத்துவங்கினர். மஸ்ஜித் முபாரக் அருகிலுள்ள மெயின் பஜார் திடல் சரியாக 6.45 மணி அளவில் கடையநல்லூர் மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் தலைவர் எஸ்.எஸ்.யூ. சைபுல்லா ஹாஜா அவர்கள் நோன்பு பெருநாள் தொழுகை நடத்தினார். அதைத் தொடர்ந்து மக்களுக்கு ஆற்றிய உரையில் ... இஸ்லாம் என்பது சாந்தியையும், அமைதியையும் போதிக்கக் கூடிய மார்க்கம். அல்லாஹ்வின் இறுதித் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்கள் அமைதி மார்க்கத்தைத்தான் மக்களுக்குப் போதித்தார்கள். தன்னுடைய நாவினாலும் கரத்தினாலும் பிறமக்களுக்கு துன்பம் தரமால் இருப்பவர்தான் உண்மையான முஸ்ம் என்று முஹம்மது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நோன்புப் பெருநாளில் கூட இஸ்லாமியர்கள் ஏழைகளின் பசிப் பிணியைப் போக்குவதற்காக ஈகையுடன் நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுகின்றனர். இந்த அடிப்படையில் மஸ்ஜித் முபாரக் கமிட்டி சார்பாக 3000க்கும் மேற்பட்ட ஏழைக் குடும்பங்களுக்கு பெருநாள் தர்மம் வழங்கப்பட்டது. இத்தகைய ஈகைப் பண்பை ஏற்படுத்துவதுதான் இஸ்லாம் என்று அவர் தன்னுடைய பெருநாள் பேருரையில் எடுத்துரைத்தார்.
கடையநல்லூர் பேட்டை பகுதியில் அக்ஸா அறக்கட்டளையின் சார்பில் ரைஸ்மில் திடல் சரியாக 6 : 45 மணிக்கு எஸ்.ஏ.பஷீர் அஹ்மத் உமரி அவர்களும் தக்வா பள்ளிவாசல் மைதானத்தில் முஹிப்புல்லாஹ் உமரி அவர்களும் மேலும் மக்காநகர் ஆயிஷா பள்ளிவாசல் திடல் மௌலவி அஹ்மத் கபீர் அவர்களும் பெருநாள் தொழுகையும் அதைத் தொடர்ந்து மக்களுக்கு குத்பா பேருரையும் நிகழ்த்தினார்கள். அனைவரும் தங்களது உரைகளில் இஸ்லாம் கூறும் மனிதநேயத்தைப் பற்றி எடுத்துரைத்தனர் . கடையநல்லூர் முழுவதிலும் இருந்து இஸ்லாமியப் பெருமக்கள் ஆர்வமுடன் பெரும் திரளாகக் கலந்து கொண்டு ஒருவருக் கொருவர் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை மஸ்ஜித் முபாரக் கமிட்டி மற்றும் அக்ஸா அறக்கட்டளை நிர்வாகிகள் க.அ. சேகுதுமான், முஹம்மது கோரி, டிஎம்.ஜபருல்லாஹ், அப்துல் குத்தூஸ், அப்துல் மஜீத், கஸ்ஸா கோரி, எஸ்.எஸ்.ஜபருல்லாஹ், சேகனா, இப்றாஹீம், பைசல், அப்துல் காதர், அக்பர், பாவா, நூர் முஹம்மத், ஹாஜா மைதின் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர்.
கடையநல்லூர் நகரக் காவல்துறை ஆய்வாளர் சபாபதி, உதவி ஆய்வாளர் சிவன் ஆகியோர் தலைமையில் பெருநாள் தொழுகை நிகழ்ச்சிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.























0 comments:
Post a Comment