அல்லாஹ்வின் மகத்தான கிருபையால் மஸ்ஜித் முபாரக் கமிட்டி ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை தொடர்ந்து தெருமுனை பிரச்சாரங்கள் நடைபெற்று வருகிறது.
அதன் தொடர்ச்சியாக 11.01.2013 வெள்ளிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு, மணிக்கூண்டு அருகே தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.
இதில் சகோதரர் முஹிப்புல்லாஹ் உமரி அவர்கள் தன் "தர்கா வழிபாடு ஓர் அநீதி" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். அதில், கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களையும் மரமட்டைகளையும் வழிபாடு செய்வது ஏற்கப்படக் கூடியதல்ல. இது அவனது சுயமரியாதையையும் பகுத்தறிவையும் பாதிக்கக்கூடியதாகவும் படைத்தவனுக்குச் செய்கின்ற ஒரு அக்கிரமமாகவும் ஆகிவிடும் என்று அவர் தன் உரையில் குறிப்பிட்டார்.
சகோதரர் எஸ்.எஸ்.யு. ஸைபுல்லாஹ் ஹாஜா அவர்கள் அல் குர்ஆன்தான் உலகப் பொதுமறை என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார்.
சென்ற மாதம் இந்தியத் தலைநகர் புதுடெல்லியில் மருத்துவக்கல்லூரி மாணவி தனியார் சொகுசுப் பேருந்தில் 6 நபர்களால் பாலியல் வல்லுறவு நிகழ்த்தப்பட்டும் மூர்க்கத்தனமாக தாக்கி கோரையாக்கப்பட்டும் பேருந்திலிருந்து தூக்கி வீசப்பட்டுள்ளார். இது தலைநகர் டில்லியை மட்டுமல்ல. மொத்த இந்தியாவையும் பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. ஒவ்வொரு தரப்பினரும் இக்கொடுமைக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று வீதிக்கு வந்து போராட ஆரம்பித்தனர்.
இவர்களுடைய போராட்டத்திற்கு முடிவு கட்டவேண்டும் என்பதற்காகவும் இது போன்ற வன்கொடுமைக்கு என்ன தண்டனை வழங்கலாம் என்று முடிவு செய்வதற்காகவும் மத்திய அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஜே.எஸ். வர்மா தலைமையில் கமிசன் அமைத்துள்ளது. அக்கமிசனிடம் மத்தியில் ஆளும் காங்கிரஸ் தன் கருத்தாக 30 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது வல்லுறவில் ஈடுபடுபவனின் ஆண்மை நீக்கம் செய்யவேண்டும் என்று தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சியான பாஜக, அதிமுக தூக்குத்தண்டனை என்றும் திமுக சாகும் வரை சிறை என்றும் பாமக தன் கருத்தாக இத்தனைக்கும் அடிப்படைக் காரணம் ஆறாய் ஓடும் சாராயம்தான். அது முற்றாக விலக்கிக் கொள்ளப்படவேண்டும் என்று கூறியுள்ளன.
மதுரை ஆதீனம் இத்தனைக்கும் பெண்கள் அணியும் கவர்ச்சி ஆடையே காரணம். ஆதலால் முஸ்லிம் பெண்களைப் போல வெளியில் வருகின்ற போது முழுவதும் தங்களை ஆடையால் மறைத்துக் கொள்ளவேண்டும். இல்லை இல்லை. Our body. Our Rights எங்களைக் கட்டுப்படுத்துவதற்கும் எங்கள் ஆடை உரிமையை பறிப்பதற்கும் எவருக்கும் உரிமை இல்லை என ஆதினக் கருத்துக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் போராட்டம் நடத்தியுள்ளனர்.
பெண்கள் தங்களைக் காத்துக் கொள்வதற்கு தற்காப்புக் கலை பயிற்றுவிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு உள்ளாடைகளாக கவச ஆடை வழங்கப்படவேண்டும். அவர்களுக்கு தற்காப்புக்காக துப்பாக்கி வழங்கப்படவேண்டும். உரிமை ஆர்வலர்களோ தூக்குத்தண்டணை மனிதாபிமானமற்ற காட்டுமிராண்டத்தனமான செயல் என்றெல்லாம் ஊடகங்களிலும் தொலைக்காட்சிகளிலும் அன்றாடம் வாதப் பிரதிவாதங்கள்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இத்தனையும் இன்னும் சில மாதங்களுக்கு பரபரப்புச் செய்தியாகத்தான் பேசப்படுமேயொழிய தூர நோக்கோடு இது போன்ற சமூக விரோத கொடிய செயல்களுக்கு இவர்களால் பிறர் திருந்தும் படியான எந்த சட்டத்தையும் கொண்டு வரவே இயலாது.
குர்ஆன் கூறுகிற தீர்வு ஒன்றுதான் தீர்க்கதரிசனமானது. ஏனெனில் அது மனிதனைப் படைத்த கடவுளாகிய அல்லாஹ்வால் தரப்பட்ட தீர்வாகும். திருமணம் முடித்த ஆணோ, பெண்ணோ பாலியல் வல்லுறவில் ஈடுபட்டது 4 சாட்சிகளுடன் நிரூபிக்கப்படுமானால் அவர்களை முச்சந்தியில் நிறுத்தி கல்லால் எறிந்து கொல்லவேண்டும். இது தொலைக்காட்சிகளிலும் வலைத்தளங்களிலும் ஒளிபரப்பப்டுமானால் இதைப் பார்க்கிற எவருக்கும் இது போன்ற தவறை செய்யவே கூடாது என்ற எண்ணத்தை அது ஏற்படுத்தும். இதுதான் இன்று நாட்டில் ஏற்பட்டிருக்கிற பாலியல் வல்லுறவிற்கு தக்க தீர்வாக அமையும் என்று தன் உரையில் குறிப்பிட்டார்.
இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தார்கள். அல்ஹம்துலில்லாஹ். இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து தெருமுனை பிரச்சாரம் நடைபெறும்.
எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!




0 comments:
Post a Comment