பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்
(சதக்கதுல் பித்ர் எனும் ) நோன்புப் பெருநாள் தர்மம்
முஹிப்புல்லாஹ் உமரி
அடிமைகள், அடிமைகள் அல்லாத மற்றவர்கள் , ஆண்கள், பெண்கள் , சிறுவர், பெரியோர் ஆகிய அனைத்து முஸ்லிம்கள் மீதும் நோன்புப் பெருநாள் தர்மத்தை நபி (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். பேரீச்சம் பழம், தீட்டப்படாத கோதுமை ஆகியவற்றிலிருந்து ஒரு ஸாவு எனவும் நபி(ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள். மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வேண்டும். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503
மேற்கண்ட ஹதீஸிலிருந்து நோன்புப் பெருநாள் தர்மம் கட்டாயமான ஒரு கடமையாகும் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.ஆனால் ஏந்த அளவு வசதி உள்ளவர்கள் மீது கடமை என்று ஹதீஸ்களில் கூறப்படவில்லை. எனவே தமது தேவை போக யாருக்கெல்லாம் இதைக் கொடுக்க சக்தி உள்ளதோ அவர்கள் மீது கடமை என்று புரிந்து கொள்ளலாம்.
நோன்புப் பெருநாள் தர்மத்தின் நோக்கம்: நோன்பு நோற்றவர் வீணான காரியங்களில் ஈடுபட்டதற்குப் பரிகாரமாகவும், ஏழைகளுக்கு உணவாகவும் இருக்கும் பொருட்டு நோன்புப் பெருநாள் தர்மத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கடமையாக்கினார்கள். யார் (பெருநாள்) தொழுகைக்கு முன்பு அதை நிறைவேற்றுகிறாரோ அது ஏற்கப்பட்ட கடமையான ஸதகாவாக அமையும். யார் பெருநாள் தொழுகைக்குப் பின் வழங்குகிறாரோ அது சாதாரண தர்மங்களில் ஒரு தர்மம் போல் அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி) நூல்: அபூதாவூத் 1371
மேற்கூறப்பட்டுள்ள ஹதீஸில் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாளைக் கொண்டாட வேண்டும் நோன்பின் தவறுகளுக்குப் பரிகாரமாக வேண்டும் என்ற இரு நோக்கங்கள் கூறப்படுகின்றன.நோன்பு நோற்றவர்கள் இந்த இரு நோக்கங்களையும் நிறைவேற்றுவர். நோன்பு நோற்காதவர்கள் ஏழைகள் மகிழ்வுடன் பெருநாள் கொண்டாட உதவுதல் என்ற நோக்கத்தை நிறைவேற்றுவர் என்பதை விளங்க முடிகின்றது.
நிறைவேற்றும் நேரம்:
...மேலும் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிவிட வெண்டும்.
அறவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503
நபித்தோழர்கள் நோன்புப் பெருநாளைக்கு ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன்னதாக அதைக் கொடுத்து வந்தனர்.
அறிவிப்பவர்: உப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1511
மேற்கண்ட நபிமொழிகள் மூலம் ஸதக்கத்துல் பித்ர் எனும் நோன்புப் பெருநாள் தர்மத்தை ரமலான் மாதத்தில் எப்போது வேண்டுமானலும் வழங்கலாம். வுழங்கப்படுவதற்கான கடைசி நேரம் (பெருநாள்) தொழுகைக்கு மக்கள் புறப்படுவதற்கு முன்பே அதை வழங்கிடவிட வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
அளவு :
நாங்கள் நபி (ஸல்) காலத்தில் ஒரு ஸாவு உணவை நோன்புப் பெருநாளில் வழங்கி வந்தோம். எங்களின் அன்றைய உணவு, தீட்டப்படாத கோதுமை,உலர்ந்த திராட்சை, பாலாடைக் கட்டி, பேரீச்சம் பழம் ஆகியவைதான்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரி (ரலி) நூல்: புகாரி 1510.
ஒரு ஸாவு என்பது இரு கைகள் கொள்ளுமளவுக்கு அரிசியை நான்கு தடவை அள்ளினால் எவ்வளவு வருமோ அது தான் ஒரு ஸாவு எனப்படும். அதாவது சற்றேரக்குறைய இத்தர்மத்தின் அளவு ஒவ்வொருவருக்கும் சுமார் 2 கிலோ 400 கிராம் அளவுள்ள அரிசி, கோதுமை அல்லது உணவாக உட்கொள்ளப்படும் ஏனைய தானியங்களையும் வழங்கலாம் அல்லது அந்த உணவு தானியத்திற்குரியதை பணமாகவும் கொடுக்கலாம்.
பங்கீட்டு முறை :
நோன்பு பெருநாள் தர்மத்தை அவரவர் தனியாக வழங்க வேண்டுமா அல்லது கூட்டாக திரட்டி வினியோகம் செய்ய வேண்டுமா? என்றால்... கூட்டாக வினியோகிப்பது தான் நபி (ஸல்) காலத்தில் நடைமுறையாக இருந்து வந்தது.
ரமலானில் ஜகாத்தை பாதுகாக்கும் பொறுப்பில் நபி (ஸல்) அவர்கள் என்னை நியமித்தார்கள்
அறிவிப்பவர்: அபுஹுரைரா (ரலி) நூல்: புகாரி (3275).
மேலும் கூட்டமாக வசூலித்து விநியோகம் செய்யும் போது, யாசிக்க வெட்கப்படுகின்ற ஏழை மக்களை தேடிச் சென்று வழங்க முடியும். தேவையான அளவுக்கு கொடுக்க முடியும். இந்த முறையில் வழங்குவது உரிய பலனைத் தரும்.
இந்த பெருநாள் தர்மத்தை வசூலித்து உரியவர்களுக்கு விநியோகிக்கும் பணியை கடையநல்லூரில் 'மஸ்ஜித் முபாரக் ஜமாஅத் ' சிறப்பாக செய்து வருவதை தாங்கள் அறிவீர்கள். சென்ற வருடங்களை போலவே இவ்வருடமும் நபர் ஒன்றுக்கு 70 ரூபாய் பெருநாள் தர்மமாக முடிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, சகோதர சகோதரிகள் நமது ஜமாஅத்திடம் தங்களின் பித்ரா நிதியை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
0 comments:
Post a Comment