சகோதரர். முஹிப்புல்லாஹ் உமரீ
ரமலான் மாதத்தில் ஓர் இரவு உள்ளது. அந்த ஓர் இரவானது ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. அந்த இரவில் தான் முதன் முதலாக நபி (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் இறங்க ஆரம்பித்தது.
அல்லாஹ் கூறுகிறான்
மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும் ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம் இது வைகறை வரை இருக்கும்.
மேற்கூறப்பட்ட அந்த மகத்துவமிக்க இரவு இது தான் என்று குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ வரையறுத்துக் கூறப்படவில்லை. எனினும் அந்த இரவு ரமலானின் இறுதி பத்து நாட்களில் ஒற்றைப்படை இரவுகளில் அந்த இரவு அமைந்திருக்கலாம் என்பது தான் ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.
''ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா(ரலி)
நூல்: புகாரி 2017
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன் அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே அதை இருபத்தொன்பதாம் இரவிலும் இருபத்தேழாம் இரவிலும் இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்! எனக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உபாதா இப்னு ஸாமித்(ரலி)
நூல்: புகாரி 2023
லைலத்துல் கத்ர் இரவு என்பது குறிப்பிட்ட இரவு என்று ஹதீஸ்களில் வந்திருந்தாலும் மேற்கூறப்பட்டுள்ள ஹதீஸ்களை படிக்கும் போது அந்த இரவு ரமலானின் கடைசி பத்து இரவுகளிலுள்ள ஒற்றைப்படை இரவுகளில் தேடிக் கொள்ளவேண்டும். காரணம் என்னவெனில் அந்த லைலத்துல் கத்ர் இரவைப்பற்றி மக்களிடம் கூற வந்த நபியவர்களுக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது என்பதும் அதுவும் உங்களுக்கு நன்மையே என நபியவர்கள் கூறியதிலிருந்து லைலத்துல் கதர் இரவு என்பது ரமலானின் பிறை 27 அன்று தான் என்பது ஆதாரமற்றது என்பது தௌ;ளத் தெளிவாக புரிகின்றது.
மேலும் அந்த நாளில் பள்ளிவாசல்களில் சீரியல் பல்புகள் தொங்கவிடுவதும் மல்லிகைப் பூச்சரங்களை தொங்கவிடுவதும் விசேச தொழுகைகள் துஆக்கள் என பல இஸ்லாத்தில்லாத புதிய அனாச்சாரங்களை அரங்கேற்றுவதுடன் இறுதியில் சீரணி என்கின்ற பெயரில் பூந்தியும் லட்டும் வழங்கப்படுகின்றன. இன்னும் அந்த நாளை பெருநாளைப் போன்று கருதிக் கொண்டு கட்டாயம் புத்தாடை அணிவதும் மார்க்கத்தில் இல்லாத புதிய நடைமுறையாகும் என்பதையும் இஸ்லாமிய சகோதரர்கள் சிந்தித்துப் பார்க்க கடமைப்பட்டிருக்கின்றார்கள்.
லைலத்துல் கத்ர் இரவின் சிறப்பு
'ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின் முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்: புகாரி 2014
ஆயிஷா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே லைலத்துல் கத்ர் இரவை அடைந்தால் அந்த இரவில் நான் என்ன கூறட்டும் என வினவினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அல்லாஹும்ம இன்னக்க அஃப்வுன் துஹிப்புல் அஃப்வ ஃபஃபு அன்னீ (பொருள் : இறைவா! நீ மன்னிக்கக்கூடியன். மன்னிப்பதையே விரும்புகிறாய். என்னை மன்னிப்பாயாக!..)
(திர்மிதி 3435)
ரமலானின் இறுதி பத்தில் அந்த இரவை தேடி நன்மையை அதிகரிப்பதற்காக பள்ளிவாசலில் இறுதி பத்தில் நபியவர்கள் இஃதிகாப் இருப்பார்கள்.
நபி (ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்: ''ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!'' என்று கூறுவார்கள்.
அறிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 2020
ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! ''லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில் இருபத்து மூன்றாவது இரவில் இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!''
அறிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
நூல் : புகாரி 2021
(ரமளானின் கடைசிப்) பத்து நாட்கள் வந்துவிட்டால் நபி (ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக்கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தாரை எழுப்பிவிடுவார்கள்!
அறிப்பவர் : ஆயிஷா (ரலி)
நூல் : புகாரி 2024
0 comments:
Post a Comment