بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

மேலும் பொறுமையைக் கொண்டும், தொழுகையைக்கொண்டும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்; எனினும், நிச்சயமாக இது உள்ளச்சம் உடையோர்க்கன்றி மற்றவர்களுக்குப் பெரும் பாரமாகவேயிருக்கும். (அல் குர் ஆன் 2:45)

தியாகத் திருநாளின் தத்துவங்கள்

                                                                 பஷீர் அஹமத் உமரீ
              
     தன்னுடைய மகனை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹீம்(அலை) அவர்களை அல்லாஹ் சோதித்தான். இறைவனின் கட்டளைக்குப் பணிந்து இப்ராஹீம்(அலை) அவர்கள் தன் மகனை அறுத்துப் பலியிடத் துணிந் தார்கள். ஆயினும் தியாகத்தின் அடையாளமாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்த மகனுக்குப் பதிலாக ஒரு பலிப்பிராணியை அல்லாஹ் கொடுத்து அதனை அறுக்கச் சொன்னான். மட்டுமல்ல வாய்மைக்கும் தியாகத்துக்கும் இச்சம்பவம் பாடமாய்- பசுமையான நினைவாய் அமைய வேண்டும் என்பதற்காக மறுமை நாள் வரை அதே நாளில் உலகம் முழுவதும் நம்பிக்கையாளர் களிடையே இந்த நடைமுறையை அல்லாஹ் ஏற்படுத்தியிருக்கிறான். இது குறித்து அல்லாஹ் திருக்குர் ஆனில் பின்வருமாறு கூறுகிறான்:

       '...நிச்சயமாக இது மகத்தான சோதனையாகும். அவருக்குப் பகரமாக பெரிய பலிப்பிராணியைக் கொடுத்தோம். பின்வரும் மக்களிடையே இந்நடைமுறையை நாம் விட்டு வைத்தோம்.' (37:106-108) இதனால் தான் ஹஜ்ஜுப் பெருநாளில் நாம் பிராணிகளை அறுத்துப் பலியிடுகிறோம். இந்தப் பெருநாளில் நாம் பிராணிகளை அறுத்துப் பலியிடுவது வெறும் சடங்காக ஆகிவிடக்கூடாது. நாம் உணர வேண்டிய பாடத்தை உணர்ந்தாக வேண்டும். அது என்ன? தியாகம்!

                இறைமார்க்கத்தை ஏற்றுக் கொண்ட மனிதர்களுக்கு இப்ராஹீம்(அலை)அவர்களைப்போல சோத னைகள் வரலாம். வரும். 'நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப் படாமல் விடப்படுவார்கள் என மக்கள் எண்ணிக் கொண்டார்களா?'(29:2) என்று அல்லாஹ் கேட்கிறான்.

               ஓரளவு அச்சத்தாலும் பசியாலும் உடமைகள், உயிர்கள் மற்றும் விளைச்சல்களில் இழப்பை ஏற்படுத்தியும் உங்களைச் சோதிப்போம் (இந்த நிலைகளில்) பொறுமையை மேற்கொள்கின்ற வர்களுக்கு (நபியே!) நற்செய்தி கூறுவீராக.(2:153)

              தவ்ஹீதை ஏற்றுக்கொண்டதற்காக பெற்றோரிடமிருந்தும் உறவினரிடமிருந்தும் எதிர்ப்புகள் தோன்ற லாம். ஊர் விலக்கம்போன்ற துன்பங்கள் தொடரலாம். மார்க்கம் அனுமதிக்காத வரதட்சணையை எதிர்ப்பதற்காக திருமணம் தள்ளிப் போகலாம். இவற்றையெல்லாம் அல்லாஹ்வுக்காக ஒரு முஸ்லிம் சகித்துக் கொள்ள வேண்டும். அதற்காக கொள்கையையும் மார்க்கத்தையும் அவன் விட்டுக் கொடுக்கக் கூடாது.

          வட்டி ஏமாற்றுதல் மோசடி செய்தல் போன்ற தீமைகளுக்காக பதவியைத் துறக்க வேண்டியது வந்தால் தொழிலை மாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டால் அதற்கும் ஒரு முஃமின் தயங்கக் கூடாது. கொண்ட கொள்கைக்கும் ஏற்றுக் கொண்ட மார்க்கத்துக்கும் சவாலாக பந்தமோ பாசமோ பதவியோ பவிசோ சொத்தோ சுகமோ எது வந்தாலும் அதனைத் தூக்கி எறிவதற்கும் ஒரு உண்மை முஸ்லிம் தயாராக இருக்க வேண்டும். இந்த உணர்வைத் தான் இந்த தியாகத் திருநாளில் நாம் அடைய வேண்டியது.

         இப்ராஹீம்(அலை)அவர்கள் எகிப்திலிருந்த தமது மனைவியையும் மகனையும் அல்லாஹ் சொல்லி விட்டான் என்பதற்காக மனித சஞ்சாரமற்ற மக்கா பாலைவனத்தில் கொண்டுபோய் விடுகிறார்கள். அங்கு நிழலுக்கு ஒதுங்க ஒரு மரம் கூடக் கிடையாது. புற்பூண்டுகள் கிடையாது. தாகம் ஏற்பட்டால் தண்ணீர் கிடையாது. அப்படிப்பட்ட இடத்தில் எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் தம் குடும்பத்தைக் குடிய மர்த்துகிறார்கள் என்றால் அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்துவதற்கு அவர்களுக்கு பந்த பாசம் குறுக்கே வரவில்லை.

            படைத்த ரப்புல் ஆலமீன் தான் இந்தக் குடும்பத்தை எனக்குத் தந்தான். இப்போது அவன் சொல்கிறான் இந்தக் குடும்பத்தை அங்கு விட்டு வா என்று! இதில் மறுப்பதற்கு என்ன இருக்கிறது? என்று தான் கருதினார்கள். இப்ராஹீம்(அலை)அவர்கள் கூறியதாக திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது:

      எங்கள் இறைவா! எனது சந்ததிகளை உனது புனித ஆலையத்திற்கருகில் (அந்த இடம் ஏற்கனவே கஃபா இருந்த இடம் ஆகும்)  விவசாயத்திற்குத் தகுதியில்லாத பள்ளத்தாக்கில், இவர்கள் தொழுகையை நிறைவேற்று வதற்காகக் குடியமர்த்திவிட்டேன். எனவே எங்கள் இறைவா! மனிதர்களின் உள்ளங்களை இவர்களை நோக்கி விருப்பம் கொள்ள வைப்பாயாக. மேலும் இவர்கள் நன்றி செலுத்திட இவர்க ளுக்குக் கனிகளை உணவாக வழங்குவாயாக.(14:37)

          மகனை அறுத்துப் பலியிடுமாறு இப்ராஹீம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் கனவின் மூலம் கட்டளை யிட்டான். கண்டது கனவு தான் என்று அவர்கள் இருந்து விடவில்லை. மகனை தியாகம் செய்வதற்கும் தயாராகி விட்டார்கள். தள்ளாத வயதிலும் நமக்கு இறைவன் ஒரு குழந்தையைக் கொடுத்தான். அதே இறைவன் தான் இந்தக் குழந்தையைப் பலியிடச் சொல்கிறான். இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிவது தான் அடிமையின் கடமை என்று தான் எண்ணினார்களே தவிர பிள்ளைப் பாசம் அவர்களின் ஈமானை அசைத்துப் பார்க்கவில்லை.
          ஆனால் இன்றோ அற்ப காரணங்களுக்கெல்லாம் மார்க்கம் அடகு வைக்கப்படுகிறது. கொள்கையில் சமரசம் செய்யப்படுகிறது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறை புறக்;கணிக்கப்படுகிறது. தங்கள் சுயநலம் பாதிக்கப்படும்போது பெற்றோரை எதிர்த்து வீட்டை விட்டே வெளியேறத் துணிபவர்கள், பதவியையும் தொழிலையும் தங்கள் சுயநலத்துக்காக துறப்பவர்கள் கொள்கையா பெற்றோரா? கொள்கையா வருமானமா? என்றொரு கட்டம் வரும்போது கொள்கைக்காக இவற்றை தியாகம் செய்வதற்குத் துணிவதில்லை. சொந்த பந்தங்கள் மற்றும் பிள்ளைப் பாசங்களுக்கு முன் இறைமார்க்கம் இவர்களுக்கு ஒரு பொருட்டாகத் தெரிவ தில்லை. இப்படிப்பட்டவர்களுக்கு இந்த தியாகத் திருநாள் படிப்பினையாக அமையாது.

           இன்றைக்குத் தூய இறைமார்க்கத்தை மக்களுக்கு எடுத் சொல்வதற்கும் கல்வி உதவித் தொகை மருத்துவ உதவித் தொகை சமுதாயத்தில் நலிந்த எழை எளியோருக்கும் தேவையுடையோருக்கும் பொருளாதார உதவி செய்தல் போன்ற சமூகப் பணிகளுக்கும் இயன்றவரை உதவுவது ஒவ்வொ ருவரின் மீதும் கடமையில்லையா? அதற்காக நாம் என்ன செய்திருக்கிறோம்? சிந்தித்துப் பார்க்க வேண்டும். மார்க்கப் பணிகளுக்கும் சமூகப் பணிகளுக்கும் பொருள் ரீதியாகவும் உடல் உழைப்பு ரீதியாகவும் உதவுவது மிகப் பெரும் தியாகமாகும்.

          இந்தத் தியாகம் தான் இன்றைக்கு மிக மிக அவசியமான ஒன்று. குறிப்பாக இந்த தியாகத்தால் தான் தூய மார்க்கம் அனைத்து மக்களையும் சென்றடைய முடியும். சமூக சேவையால் சமுதாயம் நலம் பெரும். எனவே நாம் மேலே குறிப்பிட்ட அனைத்து தியாகத்துக்கும் ஒரு முஸ்லிம் தயாராக வேண்டும். இத்தகைய தியாக உணர்வைப் பெறுவதற்கே இந்தத் தியாகத் திருநாள். அதன் அடையாள மாகத்தான் நாம் பிராணிகளைப் பலியிடுகிறோம். இந்த உணர்வைப் பெறாமல் பிராணிகளைப் பலியிடுவதால் எந்தப் பலனும் இல்லை.

          அல்லாஹ் கூறுகிறான்: அவற்றின் மாமிசங்களோ அவற்றின் இரத்தங்களோ அல்லாஹ்வை அடைவது இல்லை. மாறாக உங்களிடமுள்ள இறையச்சமே அவனைச் சென்றடையும்.(22:37)

           பிராணிகளை அறுத்துப் பலியிடுவதை இன்னொரு கோணத்திலிருந்தும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். மனிதனிடம் இயல்பாகவே இந்தக் குணம் உள்ளது. அதாவது கடவுளுக்காக எதையாவது பலியிட்டு கடவுளின் திருப்தியைப் பெற வேண்டும் என நினைக்கிறான். இதனால் தான் சிலபோது மனிதன், தான் பெற்ற பிள்ளையைக் கூட அறுத்துப் பலியிடுவதற்குத் துணிந்து விடுகிறான். இன்னும் சிலர் மற்றவரின் குழந்தையைக் கடத்தி நரபலி கொடுக்கத் துணிந்துவிடுகின்றான்.

         இந்த நிலைக்கு மனிதன் சென்றுவிடக் கூடாது. அதே நேரத்தில் அவனது உணர்வையும் மதித்து அதற்கொரு வடிகாலைத் தேடிக்தர வேண்டும் என்பதற்காகத் தான் இஸ்லாம் வருடத்திற்கு ஒரு முறை இறைவனுக்காகப் பிராணிகளைப் பலியிட்டு அதன் இறைச்சியை ஏழைகளுக்குப் பங்கிட்டுக்கொடுக்க வேண்டும் என்று சொல்கிறது. இதனால் ஏழைகள் பயனடைவதோடு அல்லாஹ்வுக்காக எதையும் தியாகம் செய்வதற்குத் தயார் என்ற உணர்வையும் மனிதன் பெறமுடியும்.

         எனவே அன்பார்ந்த சகோதர சகோரதரிளே! இந்தத் தியாகத் திருநாளில் அல்லாஹ்வுக்காக எதையும் தியாகம் செய்கின்ற தியாக உணர்வைப் பெற்று குறிப்பாக இறைமார்க்கத்தைப் பரப்புவதற்கு நம்மால் இயன்ற பொருளுதவியைச் செய்வதற்கு நாம் அனைவரும் முன்வருவோமாக! இந்தப் பணியை இந்தப் பெருநாளிலிருந்தே நாம் துவங்கிடுவோமாக! எல்லாம் வல்ல அல்லாஹ் நமக்கு இத்தகைய உணர்வைத் தந்து அவனுடைய மார்க்கத்திற்கு உதவி செய்பவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக. ஆமீன்.

Share on Google Plus

About மஸ்ஜித் முபாரக் ஜமாஅத்

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment