
32 கிரைண்டர்
நாம் உண்ணும் உணவை செரிக்கும் வேலையை வயிறு மட்டும் பார்த்துக்கொள்கிறது என்று நாம் நினைக்கிறோம். அது தவறு. 32 பற்கள் எனும் கிரைண்டரால் அரைத்த உணவையே வயிறு செரிமானம் செய்யும். அதனால் நாம் ஒழுங்காக மென்று சாப்பிடாமல், முழுசாக விழுங்கினால் அந்த உணவை வயிறாலும் செரிக்க முடியாது.
செரிக்காமல் மிஞ்சிய உணவு உடலில் மந்தத்தை ஏற்படுத்தி, உடல் பருமனுக்கு வழி வகுக்கும்.
மென்று சாப்பிட வேண்டும் என்று குழந்தைகளை மட்டுமே வற்புறுத்துகிறோம். நாம் சாப்பிடும் ஒவ்வொரு கவளம் சாப்பாட்டையும் குறைந்தது 20 விநாடிகள் மென்று சாப்பிட வேண்டும். ஆனால் திருநெல்வேலி அல்வா போன்ற சில உணவு வகைகள் நீங்கள் 5, 6 எண்ணுவதற்கு முன்பாகவே வழுக்கிக்கொண்டு சென்றுவிடும். 20 விநாடிகள் கணக்கு இதற்குப் பொருந்தாதா? என்று நீங்கள் கேட்கக்கூடும்.
நாம் உணவை முறையாக மென்று சாப்பிட வேண்டும் என்பதுதான் கணக்கே தவிர, 1, 2 என்று எண்ணுவதற்கு அல்ல. நாம் உணவை உண்ட உடன் நமது செரிமான உறுப்புகள் பல்வேறு வேதிப்பொருள்களைக் கலந்து உணவை செரிக்க வைக்கும். நமது வாயில் சுரக்கும் எச்சில்தான் செரிமானத்தின் பிரதான வேதிப்பொருள். நாம் உண்ணும் உணவுடன் நமது எச்சிலும் சேர்ந்து வயிற்றுக்குள் சென்று செரிமானத்தை ஏற்படுத்தும்.
இனிப்பான வியாதிகள்!
சர்க்கரையை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொண்டால் சுமார் 145 பிரச்னைகள் உடலில் தோன்ற வாய்ப்புகள் உள்ளன. அவற்றுள் சில:
* நோய்எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும்
* பார்வை குறையும்.
* இளமையிலேயே வயதான தோற்றம் கொடுக்கும்.
* பற்சிதைவு
* உடல் பருமன்
* மூட்டு வலி, வீக்கம்
* இதய நோய்
* கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்
* உணவு ஒவ்வாமை
* கண் புரை
* கணையத்தைச் சிதைக்கும்
* மனசோர்வு
* உடல் பருமன் உள்ளவர்களுக்கு உயர்ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தும்
* மலச்சிக்கல்
* நரம்பில் வீக்கம் (வெரிகோஸ் வெயின்)
சளித்தொல்லை:
பலருக்கு இருமலும் சளியும் பெரிய வியாதி. வேலையில் கவனத்தை செலுத்தமுடியாமல், தலைவலி, உடல் சோர்வு என மனிதனை ஒரு வழிப்படுத்திவிடும். இதுபோன்ற பிரச்னைகளில் இருந்து தப்பிக்க:
இரவில் தயிர், லஸ்ஸி போன்ற உணவுப்பொருள்களைத் தவிர்க்க வேண்டும். பகல் நேரங்களில் சாப்பிடும்போதும் அவற்றுடன் உப்பு, மிளகுத்தூள் கட்டாயம் சேர்க்க வேண்டும். ஊறுகாய், சாஸ், கெச்-அப் போன்றவற்றையும் இரவில் தவிர்க்க வேண்டும். உங்கள் வீட்டு தட்பவெட்ப நிலைக்குக் குறைவாக உள்ள உணவுப் பொருள்களையும் தவிர்க்க வேண்டும்.
எண்ணெய்ப் பொருள்களைச் சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போதே தண்ணீர் குடிக்கக் கூடாது. பால், குளிர்பானங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். கண்டிப்பாக ஏதாவது குடித்தே தீர வேண்டும் என்று விரும்பினால் டீ அல்லது வெந்நீர் குடிக்கலாம்.
அதே போன்று வேர்க்கடலை வகையறாக்களைச் சாப்பிடும்போதும் தண்ணீரைத் தவிர்க்க வேண்டும்.
நிம்மதி உங்கள் சாய்ஸ்!
உடலுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ அதேபோன்று மனதுக்கும் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உணவைச் சாப்பிட்டும், உடலை திடகாத்திரமாக பாதுகாத்தும் ஆரோக்கியமாக இல்லையென்றால் நீங்கள் மனஅழுத்தத்தில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.
முக்கியமாக உணவு உண்ணும் நேரத்தில் உங்கள் மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
எப்படி தவறான உணவுப்பழக்கம், உடற்பயிற்சி செய்யாமல் இருப்பது ஆகியவை உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்குமோ, அதேபோன்று கோபம், பழிவாங்கும் எண்ணம், பொறாமை போன்ற குணங்களும் உடல் ஆரோக்கியத்தைக் கெடுக்கும்.
நாம் கோபப்படும்போது அல்லது மேற்கூறிய குணங்களை வெளிப்படுத்தும்போது நமது முன்நெற்றியை இறுக்கி, புருவங்களைச் சுருக்கும்போது, நமது தமனிகளும் சுருங்கும். இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். இவ்வாறு அடிக்கடி நிகழும்போது தமனிகள் சுருங்கி அதில் ஏதாவது பொருள்கள் தங்கிவிடும். இது மாரடைப்புக்கு அல்லது பக்கவாதத்துக்கு வழி வகுக்கும்.
வாழ்க்கையில் வரும் பிரச்னைகள், கோபங்கள் போன்றவற்றை அவ்வப்போது மறந்துவிடாமல் அவற்றை அடைகாத்து வைத்தால், நமது உடலைத்தான் பாதிக்கும். அன்றாடம் வாழ்க்கையில் என்ன பிரச்னைகளைச் சந்தித்தாலும் அவற்றை பாஸிட்டிவ்வாக மாற்றிக் கொள்ளும் மனநிலையைப் பழக்கப்படுத்திக் கொண்டால், வாழ்வாங்கு வாழலாம்!
Thanks : Dinamani Kathir
0 comments:
Post a Comment