- முஹிப்புல்லாஹ் உமரீ
கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெருமக்களே! வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும். நம்மை படைத்த ஓர் இறைவனை மட்டும் தான் வணங்க வேண்டும் எனும் போது அவனிடம் தான் நமது தேவைகளைக் கேட்க வேண்டும். ஏனெனில்
பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: நுஃமான்பின்பஷீர்(ரலி) நூல்: அஹ்மத் 17629
பிரார்த்தனை தான் வணக்கமாகும் என்று நபி(ஸல்)அவர்கள் கூறியுள்ளார்கள். அறிவிப்பவர்: நுஃமான்பின்பஷீர்(ரலி) நூல்: அஹ்மத் 17629
ஆகவே பிரார்த்தனை என்ற இந்த வணக்கத்தை நம்மைப் படைத்த அல்லாஹ்வைத் தவிர வேறு யாரிடமும் எந்தவொரு சூழ்நிலையிலும் செய்து விடக் கூடாது.மேலும் அல்லாஹ்வும் தன்னைத் தவிர வேறு யாரிடமும் பிரார்த்திக்கக் கூடாது என்பதை அல்லாஹ் பல விதத்திலும் எச்சரிக்கின்றான்.
அவனையன்றி நீங்கள் யாரை பிரார்த்திக்கிறீர்களோ அவர்கள் உங்களுக்கு உதவி செய்யவும் தங்களுக்குத் தாங்களே உதவி செய்து கொள்ளவும் சக்தி பெற மாட்டார்கள். (அல்குர்ஆன் 7: 197)
மற்றொரு இடத்தில்
அல்லாஹ்வையன்றி வேறு எவர்களை அவர்கள் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பிரார்த்திக்கிறார்களோ, அவர்கள் எந்தப் பொருளையும் படைக்க மாட்டார்கள்; அவர்(களால் பிரார்த்திக்கப் படுபவர்)களும் படைக்கப்பட்டவர்களாவார்கள். அவர்கள் இறந்தவர்களே உயிருள்ளவர்களல்லர்; மேலும், எப்பொழுது எழுப்பப்படுவார்கள் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள். (அல்குர்ஆன் 16: 20,21)
மற்றொரு இடத்தில் கூறுகிறான்.
கியாம நாள் வரை(அழைத்தாலும்)தனக்கு பதில் கொடுக்க மாட்டாத அல்லாஹ் அல்லாதவர்களை அழைப்பவர்களை விட வழி கெட்டவர்கள் யார்? தங்களை அழைப்பதையே அவர்கள் அறிய முடியாது.அன்றியும் மனிதர் ஒன்று கூட்டப்படும்(அந்நாளில்)இவர்கள் அவர்களுடைய பகைவர்களாக இருப்பர். அவர்கள் தங்களை வழிபட்டுக் கொண்டு இருந்ததையும் நிராகரித்து(மறுத்து)விடுவர். (அல்குர்ஆன் 46: 5,6)
இந்த வசனங்கள் யாவும் அல்லாஹ்வையன்றி எவரையும் பிரார்த்திக்கக் கூடாது என்பதையும் அதனால் எந்த பயனுமில்லை என்பதையும் மாறாக அது இணைவைக்கும் பெரும்பாவம் என்று விளங்கிக் கொள்ள முடிகின்றது.
மேலும் அல்லாஹ்வை இவ்வுலகில் நாம் பார்க்க முடியாது. ஆதலால் நம்மை விட்டு அவன் தூரமாக இருக்கின்றான் என்று எண்ணிவிடக்கூடாது. மாறாக அல்லாஹ் நமக்கு மிகச் சமீபத்திலே இருக்கின்றான் அல்லாஹ் கூறுகிறான்.
(நபியே!) என் அடியார்கள் என்னைப் பற்றி உம்மிடம் கேட்டால்; ''நிச்சயமாக நான் சமீபமாகவே இருக்கிறேன், பிரார்த்தனை செய்பவரின் பிரார்த்தனைக்கு அவர் பிரார்த்தித்தால் விடையளிக்கிறேன்;, அவர்கள் என்னிடமே(பிரார்த்தித்துக்) கேட்கட்டும்;, என்னை நம்பட்டும். அப்பொழுது அவர்கள் நேர்வழியை அடைவார்கள்'' என்று கூறுவீராக. ( அல்குர்ஆன் 2: 186)
நாம் அதிகம் பாவம் செய்கின்றோம் என்பதற்காக அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வதற்கு தயங்கவோ அல்லது அவனுடைய அருளில் நிராசையோ அடையக்கூடாது ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்.
என் அடியார்களே! (உங்களில்) எவரும் வரம்பு மீறி தமக்குத்தாமே தீங்கிழைத்துக் கொண்ட போதிலும், அல்லாஹ்வுடைய ரஹ்மத்தில் அவர் நம்பிக்கையிழக்க வேண்டாம் - நிச்சயமாக அல்லாஹ் பாவங்கள் யாவையும் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மிக்க மன்னிப்பவன்; மிக்க கருணையுடையவன் (என்று நான் கூறியதை நபியே!)நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 39: 53)
மற்றொரு இடத்தில் கூறுகிறான்.
அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்காதீர்கள். ஏனென்றால் நிச்சயமாக காஃபிர்களின் கூட்டத்தைத் தவிர (வேறு யாரும்) அல்லாஹ்வின் அருளைப் பற்றி நம்பிக்கை இழக்கமாட்டார்கள். (அல்குர்ஆன் 12: 87)
மேற்கூறியவாறு அல்லாஹ் நமக்கு மிக அருகிலுள்ளான். நாம் எத்தகைய தப்பு தவறுகளை செய்திருந்தாலும் உளப்பூர்வமாக நாம் திருந்தி வாழ வேண்டி அல்லாஹ்வின் அருளில் நிராசையடையாது பிரார்த்திக்க வேண்டும்.
இவ்வாறு அல்லாஹ்வை நம்பி ஒருவர் பிரார்த்திக்கும் போது எவர் முன்னிலையிலும் தமது சுய மரியாதையை இழக்க மாட்டார்கள், எவர் காலிலும் விழ மாட்டார்கள், காணிக்கை செலுத்தி எவரிடத்தும் ஏமாற மாட்டார்கள், மலஜலத்தைச் சுமந்திருக்கின்ற எவரையும் புனிதர்களாகக் கருத மாட்டார்கள், மதத்தின் பெயராலும் பிள்ளை வரம் என்ற பெயராலும் (பெண்கள்) கற்பை இழக்க மாட்டார்கள், எவர் பொருளையும் முறைகேடாகப் பெற முயற்சிக்க மாட்டார்கள், யாருக்கும் அநீதி இழைக்க மாட்டார்கள், திருட மாட்டார்கள், கொலை செய்ய மாட்டார்கள், பொய் பித்தலாட்டங்களில் ஈடுபட மாட்டார்கள், லஞ்ச ஊழலில் ஈடுபடமாட்டார்கள். இவ்வாறு மனித சமுதாயம் பெறும் நன்மைகள் ஏராளம்! ஏராளம்!
இறுதியாக நாம் அனைவரும் அல்லாஹ்வை மட்டும் வணங்குவதோடு அவனிடம் மாத்திரமே உதவியும் தேடி அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தையும், பேரருளையும் பெற முயல்வோமாக!
0 comments:
Post a Comment